பெரம்பலூர், டிச. 21: பூத் கமிட்டி அமைத்து ஊராட்சி வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டுமென பாமக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை பொது செயலாளரும், வன்னியர் சங்க மாநில செயலாளருமான வைத்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராம.மருதவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் வருகிற சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலாக இருந்தாலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலாக இருந்தாலும் பாமக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். பூத் கமிட்டி அமைத்து பஞ்சாயத்து வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டும். கிராம வாரியாக பெண் பொறுப்பாளர்களை கொண்டு வாக்கு சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வக்கீல் தங்கதுரை, மாநில துணைத்தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.